2021-06-29 247

பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா?

வாசகர்களின் கேள்வி பதில்

வினா: [பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா?

விடை: சமகாலத்தில் உள்ள பிரச்சார அமைப்புக்களை இருவகைப்படுத்தலாம்.

முதலாவது:- தூயமார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் ஒழிவு மறைவின்றி, இயக்கவெறியின்றி, மத்ஹப் வாதமின்றி பிரச்சாரம் செய்யும் அமைப்புக்கள்.

இரண்டாவது;- மார்க்கத்தில் சில விடயங்களை மட்டும் பிரச்சாரம் செய்து கொண்டு இன்னும் சில விடயங்களை பிரச்சாரம் செய்யாமல் மௌனியாக இருக்கும் அமைப்புக்கள்.

இதில் முதலாம் தரப்பினருடன் சேர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை நாமும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம். இரண்டாம் தரப்பினர் பின்வரும் வழி கேடான காரணிகளில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

1. சில விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தல். (இச்செயல் யூதர்களின் செயலுக்கு ஒப்பாக ஆகி விடுகிறது. அல்லாஹ் கூறுகின்றான்: (தெளிவான அத்தாட்சிகள், நேர்வழியிலிருந்தும் நாம் மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவாக எடுத்துச் சொன்ன பின்னர் எவர்கள் அவைகளை மறைக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்.) {அல்குர்ஆன்: 2:159}

இவ்வசனங்கள் வழிகேட்டின் ஓர் வடிவத்தை தெளிவாக எடுத்துச் சொல்கின்றது.

2.மார்க்கத்தைப்பற்றிய தெளிவான அறிவின்மையின் காரணமாக அறியாமை காரணமாக இருளில் மூழ்கி வழிதவறிச்செல்லுதல். இதுவும் வழிகேட்டின் ஒரு காரணியாகும்.

நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்:

(நிச்சயமாக அல்லாஹ் அறிவை அப்படியே அடியார்களிடமிருந்து பிடுங்கி விடமாட்டான். என்றாலும் உலமாக்களை கைப்பற்றுவதன் மூலம் ( அறிவைக் கைப்பற்றிக் கொள்வான்.)எதுவரையெனில் ஓர் (உண்மையான ) அறிஞரையும் விட்டுவைக்கமாட்டான். மக்கள் அறிவீனர்களை தலைவர்களாக எடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் (தீர்ப்புக் ) கேட்கப்படும். அறிவில்லாமல் தீர்ப்புக்கூறுவார்கள். அவர்களும் வழி கெட்டு ( மக்களையும் ) வழி கெடுத்து விடுவார்கள். ) { புகாரி,முஸ்லிம்.}

மேலுள்ள ஹதீஸ் அறியாமையுடன் மார்க்கத்தீர்ப்புக் கொடுப்பதைவழிகேடாக எடுத்துச் சொல்வதுடன் அதை நம்பிப் பின்பற்றுவதையும். வழிகேடாக தெளிவாக முன்வைக்கின்றது.

3. உண்மையைத் தெளிவாகத் தெரிந்தும் சுய நலன்களுக்காக உண்மைகளுக்குப் புறம்பாக நடந்ததை மாற்றிக்கூறல். இதுவும் வழிகேட்டின் ஒரு காரணியாகும். [ அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்திற்குத் தீர்ப்புச்சொல்லி விட்டால் அவர்களுடைய அக்காகாரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஒரு ஆணுக்கும் எந்த ஒரு பெணுக்கும் அனுமதி இல்லை. ( அதில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கின்றாரோ அவர் நிச்சயமாக தெளிவாக வழிகெட்டு விட்டார். { அல்குர்ஆன் : 33:36 }

இவ்வசனம் தன் சுய விருப்பங்கள் அது எதுவாக இருந்தாலும் அதை மார்க்கமாக எடுத்துக்கொள்வது வழிகேடு என்று தெளிவாக கூறுகின்றது.

4. தம் அமைப்பின் தலைவரின் அல்லது வழிகாட்டுபவரின் தீர்ப்பை கண் மூடிப்பன்பிற்றல். இதுவும் ஓர் அமைப்பு வழிகேட்டில் சென்றுகொண்டிருக்கிறது என்பதின் அடையாளமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்கள் மதகுருமார்களையும், தங்கள் பாதிரிகளையும், மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் ரப்புகளாக எடுத்துக்கொண்டனர். இன்னும் ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேண்டுமென்று தான் அவர்கள் கட்டளை இடப்பட்டனர். அவனையன்றி வணக்கத்திறகுறியவன் ( வேறெவரும் ) இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். { அல்குர்ஆன்: 9:31}

அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள்என அவர்களுக்குக் கூறப்பட்டால் இல்லை, " நாங்கள் எங்களுனடய மூதாதையர்களை எதன் மீது கண்டோமா அதையே நாங்கள் பின்பற்றுவோம்." எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதையர்கள் எதையுமே விளங்காதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா ( அப்படியே பின்பற்றுவார்கள்.) { அல்குர்ஆன்: 2:170}

இவ்வசனங்களை தலைவர்களை, வழிகாட்டுபவர்களை அல்லது தமக்கு முன் வந்தவர்களை முழுமையாக சரிகண்டு அவர்கள் வழியில் கண் மூடி நடப்பதை வழிகேடு என்பதை உணர்த்துகின்றது.

மேற்கூறிய இக்காரணிகளில் ஒன்று எந்தப்பிரச்சார இயக்கங்களின் பண்பாக இருக்கின்றதோ அவ்வியக்கங்களும் அவ்வியக்கத்தைச்சார்ந்தவர்களும் வழிகேட்டின் பக்கம். அழைக்கின்ற அழைப்பாளர்களே.

அவர்கள் முன் எடுத்துச் செல்கின்ற பல மார்க்கக் காரியங்கள் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அவர்களின் மற்ற ஒரு பகுதி வழிகேட்டை அடிப்படையாகக் கொண்டதால் அங்கே அந்த வழி கேடுகளின் மூலமாக அவர்களின் நல்ல செயல்கள் கணக்கில்லாததை போன்றாகிவிடும்.

இதற்கு உதாரணமாக காவாரிஜ்களின் செய்தியை கூறலாம்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: [ உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும், அவர்களது நற்செயல்களுடன் உங்களது நற்செயல்களையும் ஒப்பிட்டுப்பார்த்து உங்களுடைய தொழுகை , நோன்பு மற்றும் நற் செயல்களை அற்பமாக கருதுவீர்கள். அவர்கள் அல்குர்ஆனை ஓதுவார்கள் ஆனால் அது அவர்களுடைய தொண்டைக்குழியை தாண்டிச்செல்லாது. வேட்டைப் பிராணிகளை விட்டு ( அதன் உடலை துளைக்கின்ற ) அம்பு உடலின் மறு புறம் வெளிப்பட்டுச் சென்று விடுவதைப்போல மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். { புகாரி _ 5058 }

நபி(ஸல்) அவர்கள் அந்த காவாரிஜ்களின் வணக்கவழிபாடுகளையும் மார்க்கத்திலுள்ள பற்றுதலையும் சிலாகித்துக் கூறியும் அவர்களிடமிருந்து வழிகேடுகளின் தன்மையின் காரணமாக அவர்கள் நரகவாதிகளாக மாறுவதை இங்கே சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இவ்விடத்தில் ஓர் விடயத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியம். அதாவது "பாவம் "என்று சொல்லப்பட்ட ஒரு காரணிக்கும் "வழிகேடு" என்று சொல்லப்பட்ட ஒரு காரணிக்கும் இடையில் வித்தியாசப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நல்லவர் ஒரு பாவத்தைச்செய்யும் போது அதை அவர் பாவம் என்று அறிந்தே செய்கின்றார் அலர் அதற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரலாம். காரணம் அவருக்கு அது பாவம் என்று தெரியும்.

இதேவேளை வழிகேட்டை மார்க்கமாக எடுத்துக்கொண்டவர் அதிலிருந்து தவ்பாச் செய்ய மாட்டார். காரணம் அதை அவர் நேர் வழியாகக் கருதுகின்றார். இதனாலேயே , வழிகேடான வழிமுறைகளை நேர் வழி எனக்கருதி தம் பிரச்சாரப்பணியின் கொள்கையாக எடுத்துக்கொண்டவர்களுடன்ஒரு போதும் நாம் சேர்ந்து பிரச்சாரம் செய்வதோ, அவர்களின் நிபந்தனைகளுக்கிணங்க அவர்களின் போக்கிலேயே ஒரு சில தலைப்புக்களில் பேசுவதோ அனுமதியாக மாட்டாது.

ஏனெனில் கொள்கையளவில் அவர்கள் வழி தவறியவர்கள். அவர்களின் கொள்கைக் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முகமாக அவர்களின் பிரச்சாரங்களில் நாங்கள் கருவியாக அமைவது அனுமதியாகாது.

அல்லாஹ் கூறுகின்றான்:

[ எவர்கள் அவர்களின் மார்க்கத்தை பிரித்துக் குளுக்களாக ஆகிவிட்டார்களோ எந்த விடயத்திலும் நீ அவர்களைச் சேர்ந்தவனாக இல்லை. அவர்களின் விடயம் அல்லாஹ்வின் பக்கமே ( கொண்டு செல்லப்படும்) பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அவன் அவர்களுக்குத் தெரியப்படுத்துவான்.

மேலும், அல்லாஹ்வுடைய வசனங்கள் நிராகரிக்கப் படுவதையோ அல்லது பரிகசிக்கப் படுவதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விடயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம் என நிச்சயமாக ( அல்லாஹ்வாகிய ) அவன் வேதத்தில் இறக்கிவைத்திருக்கின்றான். ஏனென்றால் ( அவ்வாறு அவர்களுடன் உட்கார்ந்தால்) நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்று தான். நிச்சயமாக அல்லாஹ் முனாபிக்குகள் இன்னும் நிராகரிப் போர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்த்து விடக் கூடியவன். { அல்குர்ஆன் : 4:140}

குறிப்பு:-

இன்று சில தௌஹீத் பிரச்சாரகர்கள் தாங்கள் வழிகேடான கொள்கையை உடையவர்கள் என்று கருதக்கூடிய அமைப்புக்களின் பிரச்சார மேடைகளில் அவர்களின் நிபந்தனைகளுக்கிணங்க உரை நிகழ்த்துவதை பலரும் காணலாம்.

இது இஸ்லாமிய தஃவாக் களத்தை தெளிவாகப்புரியாமல் வழிகேட்டிற்கும், வழிகேடர்களுக்கும் உதவிசெய்யும் காரணியாகும்.

அடிப்படை கொள்கையை சீர்செய்யாதவர்கள் அல்லது சீர் படுத்த தயாராகதவராகள் அல்லது அடிப்படையை பேசுவதைத் தடுப்பவர்கள் அவர்களின் சபையில் அவ்வடிப்படைக் கொள்கைகளை ஆரம்பத்தில் தெளிவுபடுத்துவதே அவசியமாகும்.

இதனால் தான் இஸ்லாம் பிரச்சாரப்பணியின் முதல் கட்டத்தில் தௌஹீத் பிரச்சாரத்தை முதன்மைப் படுத்துதை கட்டாயப் படுத்தியுள்ளது.

கொள்கையில் தெளிவு இல்லாத இப்பிரச்சாரகர்களின் இச்செயல் வழி தவறிய சீயாக்கள் வழிகேடான அவர்களின் கொள்கையை பிரச்சாரம் செய்ய அமைத்த மேடைகளில் "நற்குணம் " என்ற தலைப்பில் அவர்களின் வேண்டுதலுக்கிணங்க நாம் பேசிவிட்டு வருவதைப் போன்றுள்ளது.

வழிதவறிய அமைப்புக்களின் சில ரூபாய்களுக்காக அல்லது சில சலுகைக்களுக்காக தமது கொள்கையை அடகு வைக்கும் பிரச்சாரகர்களாக இன்று சிலர் மாறி வருவது கவளைக்குரிய விடயமாகும் அவ்வாறானவர்களை தூய்மையான பிரச்சாரப்பணி செய்பவர்களுடன் சேர்ப்பதற்கு மாற்றமாக வழி தவறிய அமைப்பைச் சார்ந்தவர்களாகவே கருத வேண்டி வரும்.

இறுதியாக ; எந்த ஒரு சபையில் இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையை ஒழிவு மறைவின்றி எடுத்துச் சொல்வதற்கு இடம் கிடைக்குமாக இருந்தால் அந்த சபைகளில் எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மறைக்கப்படுகின்ற, மறுக்கப்படுகின்ற உண்மைகள் உடைத்துச் சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை நாம் பயன்படுத்த தவறக்கூடாது. மரணம் வரை உண்மையில் மட்டும் அல்லாஹ் நம்மை நிலைபடுத்துவானாக.

                                                                            ஆக்கம்:- அன்ஸார் தப்லீகி